Share via:
நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில், நடிகை திரிஷா குறித்து மிகவும் ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இதனால் கொதித்தெழுந்த திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்து, மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
மன்சூர் அலிகானின் பேச்சுக்கு திரைத்துறையினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மன்சூர் அலிகான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர்கள் சங்கம் கேட்டுக் கொண்டதோடு, அப்படி மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. இதனை ஏற்றுக் கொண்ட டி.ஜி.பி. சங்கர் ஜிவால், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அதன் அடுப்படையில் சென்னை ஆயிரம் விளக்கு போலீசார், நடிகர் மன்சூர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மனை நேற்று (நவ.23) அவரது வீட்டிற்கே சென்று கொடுத்தது. வீட்டில் மன்சூர் அலிகான் இல்லாததால் அவரது மனைவியிடம் சம்மனை அளித்தது. உடல்நிலை சரியில்லாததால் தனக்கு காவல்நிலையத்தில் ஆஜராக அவகாசம் வேண்டும் என்று கடிதம் எழுதிய மன்சூர் அலிகான், நேற்று மதியம் 2.30 மணியளவில் சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜரானார். அங்கு அவரிடம் 1.30 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் நடிகை திரிஷாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி பெற்றுவிட்டேன். எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளகள் அனைவருக்கும் நன்றி. என்னை கண்டித்த மனிதர்களுக்கு பணிவான வணக்கங்கள் என்று ஆரம்பித்த அந்த அறிக்கை நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் தனது கருத்தை பதிவிட்டிருந்தார்.
தனது சினிமா வாழ்க்கை குறித்து தெரிவித்த மன்சூர் அலிகான், நான் திமிங்கலமாக இருந்தாலும், எனக்கு வந்த கதாபாத்திரங்கள் எல்லாமே சிறுமீன்களாகத்தான் அமைந்தது என்று பெருத்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
பெண்ணில் இருந்துதான் மனிதன் பிறக்கிறான். தாயின் காலடியில் சொர்க்கம். தாய்க்கு சேவை செய் என்றார் நபிகளார். பெண்மை புனிதம். காரணத்தோடுதான் ஆண்மையை அழியுங்கள் என்றார் பெரியார் என்று பெண்மையை போற்றியுள்ளார்.
மேலும் எனது சக திரைநாயகி திரிஷாவை என்னை மன்னித்துவிடு. இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம் வரும்போது நான் ஆசீர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக! ஆமீன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.