Share via:
12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை கள்ளழகர் கோவிலில் இன்று குடமுழுக்கு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை அருகே உலகப்பிரசித்தி பெற்ற அழகர்கோவிலில் கள்ளகழகர் கோவில் அமைந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு இக்கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்ற நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு ரூ.2 கோடி செலவில் ராஜகோபுர திருப்பணிகள் நடத்தி முடிக்கப்பட்டன.
திருக்கல்யாண மண்டப வளாகத்தில் நேற்று முன்தினம் (நவ.21) யாகசாலை பூஜைகளுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து நேற்றும் (நவ.22) 8 யாக குண்டங்களில் 40 பட்டர்கள் கொண்ட குழுவினர், ஒரே நேரத்தில் வேத மந்திரங்கள் ஓதி பூஜை நடத்தினர்.
இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக யாகசாலையில் இருந்து தீர்த்த கலசங்கள் எடுத்து வரப்பட்டு, ராஜகோபுர கும்பங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. மேலும் 15 இடங்களில் சுழலும் கருவிகள் மூலம் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது படும்படி புனிதநீர் தெளிக்கப்பட்டது. ராஜகோபுரத்தில் ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டதை பக்தர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நேற்று இரவு முதல் கோவில் வளாகம் முழுவதும் வண்ண வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

