Share via:
சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாட்டை வெற்றி மாநாடாக அனைவரும் மாற்றிக் காட்ட வேண்டும் என்று சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
சேலம் மாவட்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இளைஞரணியினர் முன்பு உரை நிகழ்த்தினார். அவர் பேசும்போது, ‘‘மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாடு போன்று தி.மு.க. மாநாடு இருக்காது. மேலும் வரப்போகும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை எதிரொலிக்கும் வகையில் தி.மு.க. மாநாடு அமையும். மேலும் ஒட்டுமொத்த இந்தியாவும், பா.ஜ.க.வை வீட்டுக்கு அனுப்பும் தேர்தலாக இது அமையும் என்று தெரிவித்தார்.
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் இலவச பேருந்து, மகளிர் உரிமைத் தொகை திட்டம், காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை முன்வைத்து பேசிய அமைச்சர் உதயநிதி, காலை உணவுத் திட்டத்தால் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருவதாக தெரிவித்தார்.
இந்தியா கூட்டணி குறித்து அவர் பேசும்போது, இந்தியாவை காப்பாற்ற வேண்டுமென்றால் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் பிரதமர் மோடிக்கு எங்கு சென்றாலும் என்னுடைய ஞாபகம்தான். நேற்று ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கூட நான் சொல்லாத ஒன்றை சொன்னதாக பேசினார் என்று நகைச்சுவையுடன் பேசிய போது அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்பியது போல், வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீட்டுக்கு கண்டிப்பாக அனுப்ப வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.