Share via:
பஞ்சரதங்களின் தேரோட்டத்தை முன்னிட்டு திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 17ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவின் 7ம் நாளான இன்று திருவண்ணாமலையில் பஞ்ச ரதங்களின் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
முழு முதல் கடவுளான விநாயகரின் தேரை மாட வீதிகளில் பக்தர்கள் இழுச் சென்றனர். அதற்கு அடுத்தபடியாக 2வது வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானின் தேரோட்டம் நடைபெற்றது.
விநாயகர் மற்றும் முருகப்பெருமானின் 2 தேர்களும் நிலைக்கு வந்து சேர்ந்ததும் பெரியதேர் இழுக்கப்பட உள்ளது. இத்தேரினை ஆண்கள் ஒரு பக்கமாகவும், பெண்கள் ஒரு பக்கமாகவும் வடம்பிடித்து இழுப்பார்கள். தேரோட்டத்தின் போது சாமி தரிசனம் செய்ய மாடவீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருப்பார்கள்.
பெரியதேர் நிலைக்கு வந்து சேர்ந்ததும் இன்று இரவு அம்மன் தேரோட்டம் நடைபெறுகிறது. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுப்பார்கள். அம்மன் தேருக்கு அடுத்தபடியாக சிறுவர், சிறுமிகள் வடம் பிடித்து இழுக்கும் சண்டிகேஸ்வரர் தேர் வலம் வரும். இந்த பஞ்சரத தேரோட்டம் இன்று இரவு வரை நடைபெறுகிறது.
மிகவும் பிரசித்தி பெற்ற பஞ்சரத தேரோட்டத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்திருப்பதால் அங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

