Share via:
இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததை இன்றளவும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திவைத்துள்ளது. எப்படியும் சொந்த மண்ணில் வெற்றி பெற்றுவிடுவோம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி உலகக்கோப்பையை தட்டிச் சென்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இந்நிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அடுத்ததாக இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி டி20 தொடரின் முதலாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை (நவ.23) இரவு 7 மணியளவில் நடைபெற உள்ளது.
ரசிகர்கள் மத்தியில் மீண்டும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டித் தொடரில் இளம் வீரர்கள் இறக்கப்பட்டுள்ளனர். உலகக்கோப்பை தொடரில் விளையாடிய சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது. இதற்கு மாறாக ஆஸ்திரேலிய அணியில் உலகக்கோப்பையில் விளையாடிய 7 வீரர்கள் இந்த டி20 போட்டித் தொடரில் விளையாடும் நிலையில் மேத்யூ வேட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியை, இந்திய அணியின் இளம் வீரர்கள் எப்படி சமாளித்து டி20 தொடரை கைப்பற்றுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக கவனித்து வருகின்றனர்.