Share via:
கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியை முதல்வர் பினராயி விஜயன் நடத்தி வருகிறார். அக்கட்சியின் சார்பில் நவகேரள சதஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் முதல்வர் பினராயி விஜயன் தனது மந்திரிகளுடன் ரூ.1.5 கோடி மதிப்பிலான கொகுசு பேருந்தில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
36 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த பயணம் வருகிற டிசம்பர் 24ம் தேதி முடிவடைகிறது. மாநிலம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் நிலையில் சொகுசு பேருந்து வாங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் யச்சேரி தொகுதியில் முதல்வர் பயணம் மேற்கொண்டதை முன்னிட்டு அங்கு காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதை மீறி காங்கிரஸ் இளைஞர் கட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கருப்புக் கொடி காட்ட முயன்றதால் அதிர்ச்சியடைந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அவரை பலமாக தாக்கி அடித்து உதைத்தனர்.
தாங்கள் கையில் வைத்திருந்த ஹெல்மெட், அங்கிருந்த பூத்தொட்டி உள்ளிட்ட பொருட்களால் சரமாரியாக அடித்து உதைத்தனர். அதேசமயம் ஒரு பெண்ணும் கருப்பு கொடி காட்ட முயன்றநிலையில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த நெஞ்சை பதறவைக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அந்த இளைஞரும் பெண்ணும் தம்பதி என்று கூறப்படுகிறது.