Share via:
தவறாக சித்தரித்து செய்தி பரப்பி வருவதால் நான் நிச்சயமாக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நடிகர் மன்சூர் அலிகான், செய்தியாளர்கள் சந்திப்பில் மிகவும் காட்டமாக பேசியுள்ளார்.
பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை திரிஷா குறித்து பேசியது பெரிய சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்பிரபலங்கள் மன்சூர் அலிகானை கண்டித்து கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யும் நிலை உருவான நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகை திரிஷா வலியுறுத்தினார்.
இந்நிலையில், ‘சரக்கு’ என்ற புதிய திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் மன்சூர் அலிகான் மிகவும் கோபத்துடன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பேசும் போது, 4 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து எடுத்திருக்கும் திரைப்படத்தை வெளி வரவிடாமல் செய்வதற்காக இப்படி சதி செய்கிறார்கள். சினிமாவில் கற்பழிப்பு காட்சி வந்தால் அவர்களை உண்மையாக கற்பழித்துவிடுவார்களா?.. என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் நடிகர் சங்கம் என்னை கண்டித்திருக்கிறது. உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா?.. உள்ளிட்ட பல்வேறு அநாகரீகமாக வார்த்தைகளை மிகவும் கோபமாக பேசி திட்டியுள்ளார். மேலும் என்னை வேண்டுமென்றே டார்கெட் செய்கிறார்கள். தமிழ்நாடே என் பக்கம் இருக்கிறது. எனவே எனக்கு பயமில்லை என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், என்னுடன் ஸ்கீரின் ஸ்பேஸ் செய்ய மாட்டேன் என்று திரிஷா மறுத்த நிலையில், தற்போது எல்லா பத்திரிக்கையிலும் ஏதோ பொண்ணு, மாப்பிள்ளை மாதிரி எங்கள் 2 பேரின் புகைப்படத்தையும் ஒன்றாக இணைத்து செய்தி போடுகிறார்கள். நான் சொன்ன கருத்துக்களை புரிந்து கொள்ளாமல் இது நடந்துள்ளதால் நான் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க மாட்டேன்’’ என மன்சூர் அலிகான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது மறுபடியும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.