Share via:
மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை தற்போது 2 ஆயிரத்தை கடந்துள்ளது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.
வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுதான் மொராக்கோ. இங்கு கடந்த 8ம் தேதி (செப்.) இரவு 11.11 மணிக்கு ரிக்டர் அளவு கோலில் 6.8 என்று பதிவான அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன் காரணமாக கட்டிடங்கள் குலுங்கி சீட்டுக்கட்டுகளை போல சரிந்தது. இதனால் அலறியடித்துக் கொண்டு ஓடிய பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் வீட்டைவிட்டு தெருக்களில் தஞ்சமடைந்தனர். மேலும் இரவு நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பலர் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் போனது.
அதன்படி மாரகேஷ், அல் ஹவுஸ், அஷிலால், சிஷவ், டரொண்ட் ஆகிய நகரங்களில் நிலநடுக்கத்தின் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. முதல் நாள் கணக்கெடுப்பின் போது 1,037 ஆக இருந்த பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்தவகையில், கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 2000ஐ கடந்து 2,059 பேர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 120 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் இது என்று தெரிவித்த மொராக்கோ அரசு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
எங்கு பார்த்தாலும் சடலங்களாகவும், அழு குரல்களாகவும் பார்ப்பவர்களின் நெஞ்சை கணக்க வைக்கிறது. தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருவதால், பலர் சிக்கியிருக்கலாம் என்றும் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.