Share via:
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தே.மு.தி.க. தலைவரும் நடிகரும் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக நடிப்பில் இருந்தும் கட்சிப்பணியில் இருந்தும் விலகி ஓய்வெடுத்து வருகிறார். இருப்பினும் அடிக்கடி வெளிநாட்டிற்கும் சென்றும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதனால் விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா தலைமையில் கட்சியின் அனைத்து பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் தீபாவளி பண்டிகையின் போது விஜயகாந்த், பிரேமலதா அவர்களது 2 மகன்கள் ஒன்றாக சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. அந்த புகைப்படத்தில் விஜயகாந்த் மிகவும் தொய்வாக காணப்பட்டதால் அவரின் உடல்நிலை குறித்து கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும் கவலையடைந்தனர்.
இந்நிலையில்தான் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 3 வது நாளாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து தே.மு.தி.க. சார்பில் செய்திக் குறிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், ‘‘தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மருத்துவமனை சார்பில், மார்பு சளி மற்றும் இருமல் அதிகமாக இருந்ததன் எதிரொலியாக விஜயகாந்த் மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்டதால் அவருக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.