Share via:
18வது ஜி20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தி முடித்ததை தொடர்ந்து அடுத்த ஆண்டிற்கான மாநாட்டின் பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
18வது ஜி20 மாநாட்டு கடந்த 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சர்வதேச தலைவர்கள் கலந்து கொண்டு இந்தியாவின் ஏற்பாடுகளை கண்டு வியப்படைந்தனர்.
‘‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’’ என்ற கோட்பாட்டின் கீழ் நடத்தப்பட்ட ஜி20 மாநாடு சர்வதேச அளவில் இந்தியா மீதான கவனத்தை அதிகரித்துள்ளது. இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த மாநாட்டில் ஆப்பிரிக்க யூனியனை நிரந்த உறுப்பு நாடாக இணைக்கும் நிகழ்வு முத்தாய்ப்பாக அமைந்து பலரின் பாராட்டையும் பெற்றது.
மாநாட்டின் இரண்டாம் நாளன்று (செப்.10) காலை மழைக்கு நடுவே டெல்லி ராஜ்கோட் பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு உலகத் தலைவர்கள் வருகைபுரிந்து அஞ்சலி செலுத்தி மரக்கன்றுகளை நட்டனர்.
அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற கருத்தரங்கிற்கு பிறகு ஜி20 கூட்டமைப்பின் அடுத்த மாநாட்டை நடத்தும் அதிகாரத்தை பிரேசில் நாட்டு அதிபரிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, டிசம்பர் மாதம் வரை ஜி20 தலைமைப் பொறுப்பில் இருப்பதால், வருகிற நவம்பர் மாதம் காணொலி மூலமாக ஒரு கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ஜி20 கூட்டம் நிறைவு பெற்றதாக அதிகாப்பூர்வமாக அறிவித்தார்.