Share via:
தீபாவளி பண்டிகையின் போது மாயமான கல்லூரி மாணவர், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் திருப்பத்தூரில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், புங்கம்பட்டு நாடு ஊராட்சி, கல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான வேடி என்ற இளைஞர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த மாணவர் வேடி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது தீபாவளி பண்டிகையின் போது திடீரென்று மாயமாகியுள்ளார். நள்ளிரவு வரை வீட்டிற்கு திரும்பாததால் கலக்கம் அடைந்த பெற்றோர் நண்பர்கள் வீடுகளிலும், உறவினர்களின் வீடுகளிலும் தேடினர்.
எங்கு தேடியும் கிடைக்காததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், திருப்பத்தூர் போலீசில் புகார் கொடுத்து ஒரு பக்கம் தேடி வந்தனர்.
இந்நிலையில் கல்லூரி மாணவர் வேடி தொலைந்து போன 4 நாட்கள் கழித்து அதாவது நேற்று (15ம் தேதி) அரசுக்கு சொந்தமான கிணற்றில் சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற போலீசார் மாணவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாணவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.