Share via:
ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. தேசிய தலைவர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசினார்.
200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்திற்கு வருகிற (நவம்பர்) 25ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் ராஜஸ்தானில் ஆளும்கட்சியான காங்கிரசும், பா.ஜ.க.வும் தேர்தல் பிரசார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மீண்டும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று காங்கிரசும், எப்படியும் ஆட்சியை கைப்பற்றியே தீர வேண்டும் என்று பா.ஜ.க.வும் காய் நகர்த்தி வருகின்றன.
இந்நிலையில் மாநில தலைவர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, ராஜஸ்தான் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசினார்.
தேர்தல் அறிக்கையில், நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுடன் புத்தகம், பை உள்ளிட்ட பொருட்களை வாங்க ஆண்டுக்கு ரூ.1,200 உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி அதிகரிக்கப்பட்டு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கப்படும்.
ரூ.40 ஆயிரம் கோடியில் மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
அதன் பின்னர் ஜெ.பி.நட்டா பேசும்போது, ‘‘இவை வெற்று தாளில் எழுதப்பட்ட வெறும் வார்த்தைகள் கிடையாது. இவற்றை நிறைவேற்றுவதற்கு நாங்கள் கடுமையாக பாடுபடுவோம்’’ என்று உறுதியுடன் தெரிவித்தார்.