Share via:
மக்களின் வேகமான வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் துரித உணவகங்களும், ஆர்டர் செய்து உணவு சாப்பிடும் பழக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மக்கள் சவர்மா, ஃப்ரைடு ரைஸ் உள்ளிட்ட துரித உணவகங்களை அதிகளவில் சாப்பிட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சவர்மா சாப்பிட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை கீழ் நான்காம் வீதியைச் சேர்ந்த யூசுப் என்பவர் துரித உணவகத்தை நடத்தி வருகிறார். இங்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சவர்மா வாங்கி சாப்பிட்டுள்ளனர். 7 வயது சிறுவன் உட்பட 5 பேருக்கும் திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 பேருக்கும் வாந்தி மற்றும் வயிற்று வலிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து குறிப்பிட்ட அந்த துரித உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் உணவகத்தில் இருந்து 7 கிலோ கெட்டுப் போன சிக்கனை பறிமுதல் செய்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் 5 பேருக்கு உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்திய அந்த உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும் அதே பகுதியில் செயல்பட்டு வரும் பல்வேறு துரித உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சவர்மா சாப்பிட்டு உடல்நிலை பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.