Share via:
எந்த நேரத்திலும் எடப்பாடி பழனிசாமி கவர்னரை சந்திக்க வாய்ப்பு
உண்டு என்று பரபரப்பு கிளம்பியிருக்கும் நேரத்தில், ‘விஜய் முதல்வர் ஆவதை தடுக்கவில்லை.
அதிமுக, திமுக தங்களுக்குள் இணைந்து பெரும்பான்மையை நிரூபித்தால்கூட, அவர்களும்
ஆட்சி அமைக்க உரிமை கோரலாம்’ என்று தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் கூறியிருக்கும்
கருத்து விஜய் கட்சியினரை உசுப்பேற்றியிருக்கிறது.
தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு ஆர்.வி.அர்லேகர் அளித்த
பேட்டியில், ‘’விஜய் தனக்கு பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்தால் எந்தெந்த கட்சிகளின்
ஆதரவு தனக்கு இருக்கிறது என்பதை முன்கூட்டியே நிரூபிக்க வேண்டும். அப்படி பெரும்பான்மையை
நிரூபிக்க முடியாத கட்சியை எப்படி நான் ஆட்சி அமைக்க அழைக்க முடியும்..? விஜய்
நாளைக்கே தனக்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக நிரூபித்தால் உடனே அவரை
ஆட்சி அமைக்க அழைக்கப் போகிறேன்.
விஜய் மட்டுமல்ல, ஜனநாயக முறைப்படி யாரையுமே என்னால் தடுக்க
முடியாது. அதிமுக, திமுக தங்களுக்குள் இணைந்து பெரும்பான்மையை நிரூபித்தாலும்
அவர்கள்கூட ஆட்சி அமைக்க உரிமை கோரலாம்.
என்னைப் பொருத்தவரை, 118 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதை யார்
நிரூபிக்கிறார்களோ அவர்களைத்தான் என்னால் அழைக்க முடியும். அதற்காக அனைவரையும்
ஆளுநர் மாளிகைக்கு அழைத்து வர வேண்டும் என்ற அர்த்தமில்லை.
எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தற்போதைய
தமிழக அரசியல் சூழலுக்கு பொருந்தாது. அந்த வழக்கு ஏற்கெனவே உள்ள ஆட்சிக்குத்தான்
பொருந்தும். புதிய ஆட்சி அமைவதற்கு அனுமதி வழங்குவதற்கு அந்த வழக்கின் தீர்ப்பை
அடிப்படையாக கொள்ள முடியாது.
அடுத்த 2, 3 நாட்களில் அடுத்த 2, 3 நாட்களில் யாருமே 118 என்ற
இலக்கை அடைய முடியாவிட்டால், எனக்கு முன்பாக சட்டரீதியாக என்னென்ன வழிமுறைகள்
இருக்கிறதோ அதில் சிறப்பான ஒன்றை கடைபிடிப்பேன்.
எம்எல்ஏக்களை நட்சத்திர விடுதிகளில் அடைத்து வைத்து குதிரை
பேரம் நடத்துவது நல்ல விஷயம் அல்ல. அதை தடுப்பதற்காகத்தான் என்னால் முடிந்த
வரை இந்த விவகாரத்தை விரைவாக முடிவுக்கு கொண்டு வர முயற்சித்து வருகிறேன். அதற்காக
பெரும்பான்மை இல்லாத ஒரு கட்சியை அழைத்து ஆட்சி அமைக்குமாறு என்னால் எப்படி
கூற முடியும்?
118 உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதை ஆராய்ந்து,
அதில் திருப்தியடைந்தால் மட்டுமே என்னால் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும்..’’
என்று கூறியிருக்கிறார்.
இது, வெளிப்படையாக விஜய்க்கு விடுக்கப்பட்ட மிரட்டலாகவே பார்க்கப்படுகிறது.
இரண்டு நாட்களில் விஜய்யால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்றால், அதிமுக
ஆட்சியமைக்கும் திமுக ஆதரவு கொடுக்கும் என்றே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விஜய்யை அழைக்கவில்லை என்றால் மெரினாவில் ஜல்லிக்கட்டு
புரட்சி போன்று போராட்டம் நடத்துவோம் என்று விஜய் ரசிகர்கள் பேசிவருகிறார்கள். இது
நடந்தால் ஆளுநர் ஆட்சிக்கு வழி வகுக்கும் என்றே சொல்லப்படுகிறது.
