Share via:
எக்ஸ் வலைதளம் மூலம் கிடைக்கும் வருமானத்தை இஸ்ரேல் மற்றும் காசா மருத்துவமனைகளை சீரமைக்க வழங்கப் போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்த போர் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போரில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், காசாவில் பொதுமக்கள் உணவு, குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதி இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் மருத்துவமனைகளை ஹமாஸ் அமைப்பினர் தங்கள் பதுங்கும் இடங்களாக பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இதன் விளைவாக காசாவில் செயல்பட்டு வரும் மருத்துவமனைகளை இஸ்ரேல் ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனையை விட்டு வெளியேறி சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உலக கோடீஸ்வரரும், எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், தனது எக்ஸ் வலைதளத்தின் விளம்பரம் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானம், போரில் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளை சீரமைக்கவும், காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும், நன்கொடையாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் படையெடுப்பால் பாலஸ்தீனியர்கள் 13 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில் 2,700 பேர் மாயமாகியுள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 1,200 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசாவில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

