Share via:
கோவையில் ஜக்கி வாசுதேவ் நடத்திவரும் ஈஷா மையத்தில் இரண்டாவது
நாளாக விசாரணை தொடர்வதையடுத்து, இந்த மையத்துக்கு சீல் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை
வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி முதல் பிரதமர் வரையில் பலரையும் வரவழைத்து பிரமாண்டமாக
விழா நடத்தும் அளவுக்கு ஜக்கி வாசுதேவ் வலிமையுடன் இருப்பதால் விசாரணையில் இருந்து
தப்பிக்க முடியாத அளவுக்கு சீல் வைத்தால் மட்டுமே நியாயமான விசாரணை நடத்த முடியும்
என்கிறார்கள்.
நில அபகரிப்பு, அனுமதியின்றி கட்டிடம் கட்டுதல், வசூல் மோசடி,
ஆட்கள் காணாமல் போதல், கட்டாயப்படுத்தி இளம் பெண்களை தங்க வைத்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள்
ஈஷா மையத்தின் மீது எழுந்துவந்தன. ஆனால், மேலிடத்தின் தொடர்புகள் மூலம் இந்த குற்றச்சாட்டுகளை
கண்டுகொள்ளாமல் தன் இஷ்டத்துக்கு யோகா மையம் நடத்தி வசூல் செய்கிறார் ஜக்கி வாசுதேவ்.
இந்த நிலையில், கோவை வடவள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜர்
என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில்
தன்னுடைய மகள்களான கீதா மற்றும் லதா இருவரையும் மூளைச்சலவை செய்து ஈஷா யோகா மையத்தில்
தங்க வைத்திருப்பதாகவும், அவர்களை மீட்டுத்தர வேண்டும் என்றும் ஆட்கொணர்வு மனு தாக்கல்
செய்திருந்தார். அந்த ஆட்கொணர்வு மனுவுடன் சேர்த்து, ஈஷா யோகா மையத்தின் மீதான பல குற்றச்சாட்டுக்களையும்
அவர் முன்வைத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரின் இரண்டு மகள்களிடமும்
நேரில் விசாரணை நடத்திய பிறகு, இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இந்த வழக்கில் விரிவான அறிக்கையை வரும் அக்டோபர் 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தன்னுடைய மகளுக்குத் திருமணம் நடத்திவைக்கும்
ஜக்கி வாசுதேவ், மற்றவர்களை மட்டும் சந்நியாசியாக்குவது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த விசாரணையில் ஈஷா யோகா மையத்தின் மீது உள்ள மற்ற வழக்குகள் குறித்தும் நீதிபதிகள்
கேள்வி எழுப்பி இருந்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் நேற்று
விசாரணை நடத்தினர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், டி.எஸ்.பி. சிவக்குமார்,
சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் உள்பட 50க்கும் மேற்பட்ட
அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்தினர். பேராசிரியர் காமராஜரின் மகள்கள் மட்டுமின்றி
அங்குள்ள மற்றவர்களிடமும் விசாரணை நடத்தினர். காலை 10.45 மணி வாக்கில் தொடங்கிய விசாரணை
இரவு 7.30 வரை நீடித்தது.
ஈஷாவில் இதுவரை தங்கி உள்ளவர்கள் எத்தனை பேர், எவ்வளவு பெண்கள்
துறவறம் பூண்டுள்ளனர், வெளிநாட்டினர் எத்தனை பேர் உரிய ஆவணத்துடன் தங்கியுள்ளனர், ஈஷா
வந்து மாயமானவர்கள் யாராவது உள்ளனரா என்பன குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக்
கூறப்படுகிறது. இந்த விசாரணை இன்றும் தொடர்கிறது. துறவிகள், தன்னார்வலர்கள், ஈஷா ஊழியர்கள்
என 700-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்து வருகிறது.
கீதா, லதா இருவரும் பிரம்மச்சரியம் பெற்று மாமயூ, மாமதி என்ற பெயரில்
ஈஷாவில் தங்கியுள்ளனர். பேராசிரியர் காமராஜர் தனது மகள்களை மீட்டுத்தரக் கோரி
சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இது கண் துடைப்பு விசாரணையாக இருக்கக்கூடாது என்பதற்காக ஈஷா மையத்தை
சீல் வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
முறைகேடுகளை முழுமையாக விசாரணை செய்யும் வரையிலும் சீல் வைப்பாரா
ஸ்டாலின்..?