Share via:
திமுக அரசின் மீது கடுமையாக விமர்சனம் செய்துவருபவர் சவுக்கு சங்கர்.
பெண் போலீஸாரை அவமரியாதை செய்தார் என்று கைது செய்யப்பட்டபோது, கீழே விழுந்து கையை
உடைத்துக்கொண்டார். இப்போது மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், மறுபடியும்
கை உடையுமா என்பது கேள்வியாக மாறியுள்ளது.
கடந்த முறை சவுக்கு சங்கருக்கு ஆதரவாக அதிமுக அறிக்கை வெளியிட்ட
நிலையில், இப்போது பாஜக ஆதரவு காட்டுகிறது. இது குறித்து பாஜக நாராயணன், ‘’பெண்களின்
பாதுகாப்பை வேட்டையாடிய மனித மிருகங்களும், போதை கடத்தல் மன்னன்களும், சட்டம் ஒழுங்கை
சீரழித்து வரும் சமூக விரோதிகளும் தமிழகத்தில் சர்வ சாதாரணமாக உலவி வரும் வேளையில்,
ஒரு ஊடகவியலாளரைத் தீவிரவாதியைப் போல கைது செய்யும் அளவிற்கு அப்படி என்ன அவசியம்?’’
என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்நிலையில் மதுபான பார் உரிமையாளரை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்பட்ட
புகாரில், சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சமீபத்தில் ஒரு சினிமா கம்பெனி சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு
செய்தது. ‘எம்.ஆர்., புரொடக் ஷன்ஸ்’ மற்றும் ‘வணக்கம் தமிழா மூவிஸ்’
சார்பில் மகேஷ் ரம்யா, ஆயிஷா சாதிக் இணைந்து, ரெட் அண்டு பாலோ என்ற படத்துக்கு சங்கர்
விமர்சனம் வெளியிட்டார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வாயிலாக ஈட்டப்பட்ட
பணத்தில், இப்படம் தயாரிக்கப்பட்டு உள்ளதாக, அதில் குற்றம் சாட்டியிருந்தார்.
இதுகுறித்து, சங்கர் மீது ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில், தயாரிப்பு
நிறுவனம் சார்பில் ஜூன் மாதம் புகார் கொடுக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார்,
நவ., 2ம் தேதி அவருக்கு ‘சம்மன்’ அனுப்பினர். அதை சவுக்கு சங்கர் ஏற்காததால், அவரது
அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர்.
இந்நிலையில், மடிப்பாக்கம் உதவி கமிஷனர் முத்துராஜ் தலைமையில்
போலீசார், பல்லாவரம் ரேடியல் சாலை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சவுக்கு சங்கரை
கைது செய்ய நேற்று காலை சென்றனர். போலீசார் வருவதை அறிந்த சவுக்கு சங்கர், உள்ளே இருந்து
கதவை தாழிட்டு, ‘‘என்னையும், என் குழுவையும் அநியாயமாக கைது செய்ய பார்க்கின்றனர்’’
என, சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார்.
போலீசார் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் சங்கர் கைதுக்கு
ஒத்துழைக்கவ்ல்லை. எனவே, தீயணைப்பு வீரர்களை வரவழைத்த போலீசார், அவர்களின் உதவியுடன்
வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின், வீடு முழுதும் சோதனையிட்டு, ஆவணங்கள்,
பொருட்களை பறிமுதல் செய்தனர். அதேநேரம், அவரது மொபைல் போன் கிடைக்கவில்லை.
மதுபான பார் உரிமையாளரை மிரட்டி பணம் பறித்ததால், சைதாப்பேட்டை
போலீசாரால் சங்கர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நந்தனம் பகுதியில், ஹரிச்சந்திரன் என்பவர் புதிதாக மதுபான
பார் துவக்கியுள்ளார். அந்த பார் பற்றி பொய்யான தகவல்களை பதிவு செய்து சமூக வலைதளங்களில்
வெளியிடுவதாக, சங்கர் மிரட்டியதாக, போலீசார் கூறுகின்றனர். உரிமையாளரை மிரட்டி, ‘ஜிபே’
வாயிலாக, 94,000 ரூபாய் பெற்று கொண்டதாக, ஹரிச்சந்திரன் அளித்த புகாரில்தான், சங்கர்
கைது செய்யப்பட்டு உள்ளார் என, போலீசார் கூறினர்.
விசாரணைக்கு பின், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட
சங்கரை, வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சவுக்கு சங்கர் இந்த வழக்கில் வெளியே வந்தாலும், அவர் மீது இன்னும் அடுத்தடுத்த வழக்குகள்
பாயலாம் என்கிறார்கள். அதோடு சங்கர் கீழே விழுந்து கை உடைவதற்கு வாய்ப்பு உண்டு. தேர்தல்
வரை சிறைக்குள் இருக்கவைக்கும் முயற்சிகள் நடக்கிறது என்கிறார்கள்.
