Share via:
அணைகள் காலியாகாமல் இருக்க தெர்மாகோல் கொண்டு மூடி வைத்துள்ளோம் என்று சட்டசபையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசிய போது சிரிப்பலையால் அரங்கமே அதிர்ந்தது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை (அக்.9) கூடியது. அதைத்தொடர்ந்து வினாக்கள் விடைகள் நேரத்தின் போது, சட்டமன்ற உறுப்பினர் செல்லூர்ராஜூ பேசும் போது, ‘‘மதுரை மாநகரில் சாக்கடை நீர் குடிநீருடன் கலந்து வருவதால் அரசு பணிகளை விரைவுபடுத்த வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ‘‘கம்பத்தில் இருந்து மதுரைக்கு நீர் கொண்டு செல்லும் பணியை அ.தி.மு.க. ஆரம்பித்தது. இருப்பினும் அனுமதி பெறாமல் இருந்தது என்று குற்றம்சாட்டி பேசினார். மேலும் 160 எம்.எல்.டி. தண்ணீர் கொண்டு வருவதற்கான பணி தற்போது நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். அதோடு பைப் லைடன் போட வேண்டிய பணிகளை முடித்து முதலமைச்சர் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பார் என்று தெரிவித்தார்.
அமைச்சர் கே.என்.நேருவின் பேச்சில் குறுக்கிட்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ‘‘நிச்சயமாக தண்ணீர் கிடைக்கும் என்று தெரிவித்ததோடு, அணைகள் காலியாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தெர்மாகோல் கொண்டு மூடி வைத்துள்ளோம். கவலைப்பட வேண்டாம்’’ என்று கூறிய போது சட்டப்பேரவை அரங்கமே சிரிப்பலையால் அதிர்ந்து போனது.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் செல்லூர் ராஜூ செய்த தெர்மாகோல் நடவடிக்கை தமிழகத்தில் பல்வேறு மீம் கிரியேட்டர்களுக்கும் நெட்டீசன்களுக்கும் தீனிபோட்டதை அமைச்சர் துரைமுருகன் தற்போது நினைவுகூர்ந்துள்ளார் என்பது தற்போது பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.
