Share via:

இந்தித் திணிப்பு,
மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழகம் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. நிவாரண நிதி தராமல்
மோடி அரசு தமிழகத்தைப் புறக்கணித்துவருகிறது. இந்த விவகாரங்களுக்காக தி.மு.க. கூட்டணியினர்
போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்திவரும் நிலையில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று
மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.
அடித்து விளையாட
வேண்டிய நேரத்தில் சம்பந்தமில்லாமல் பா.ஜ.க. மீதுள்ள பற்றையும் அன்பையும் காப்பாற்றுவதற்காகவே
சாதிவாரி கணக்கெடுப்புப் போராட்டம் நடத்துவதாக அவரது கட்சியினரே வருத்தப்படுகிறார்கள்.
அதோடு அன்புமணி இன்று வெளியிட்ட அறிக்கையில், ‘’தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த
பின்னர் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளின் எண்ணிக்கை தொடர்பாக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின்
அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசி
வருகிறார். சென்னையில் நேற்று நடந்த அரசு
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர்,
இதுவரை 90 விழுக்காட்டுக்கும், அதாவது 450க்கும் கூடுதலான
வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக தெரிவித்திருக்கிறார். இதுவரை
10% வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்படாத நிலையில்,
90%க்கும் கூடுதலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு
விட்டதாக கூறுவது தமிழ்நாட்டு மக்களை
ஏமாற்றும் செயலாகும்.
தமிழ்நாட்டில்
கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத்
தேர்தலின் போது 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
திமுக ஆட்சிக்கு வந்து நான்கு
ஆண்டுகள் நிறைவடைவிருக்கும் நிலையில், இதுவரை அதிகபட்சமாக
50 வாக்குறுதிகள், அதாவது 10% வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை. ஆனால்,
திமுகவின் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றபட்டு விட்டதாகவும்,
இனி நிறைவேற்றுவதற்கு வாக்குறுதிகளே
இல்லை என்பது போலவும் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின்
பேசி வருகிறார். கடந்த வாரம் நடைபெற்ற
நிகழ்ச்சி ஒன்றில் இதுவரை 389 வாக்குறுதிகள்
நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவர்கள் கூறியிருந்தார். ஆனால், அவ்வளவு வாக்குறுதிகள்
நிறைவேற்றப்படவில்லை என்பதால் உண்மை நிலையை
மக்களுக்கு விளக்க நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள்
குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட
வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியிருந்தது.
ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதுவரை
வெள்ளை அறிக்கை வெளியிட வில்லை.
ஆனால், முன்னுக்குப் பின் முரணாக பேசியிருக்கிறார்.
கடந்த ஆண்டில் 99% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாகக் கூறிய முதலமைச்சர், அதன்பின்
கடந்த வாரம் 389 வாக்குறுதிகள் நிறைவேற்றப்
பட்டு விட்டதாகக் கூறினார். இப்போது 90% வாக்குறுதிகள்
நிறைவேற்றப்பட்டு விட்டதாகக் கூறுகிறார். அப்படியானால், ஒரே வாரத்தில் 61 வாக்குறுதிகளை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்கு நிறைவேற்றினார்?
எப்படி நிறைவேற்றினார்? என்பது விந்தையாக இருக்கிறது’’
என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தமிழக மக்களை புதிய
பாடத்திட்ட விவகாரம் உலுக்கியெடுக்கும் போது இந்த விஷயத்துக்காகப் போராட்டம் நடத்துவது
பா.ஜ.க.வை காப்பாற்றுவதற்கு என்று எல்லோருக்குமே தெரியும். ஏன் இப்படி அவமானப்பட வேண்டும்
என்று பா.ம.க.வினரே கோபமாகிறார்கள்.