Share via:

நாடு போற்றும் நான்காண்டு… தொடரட்டும் பல்லாண்டு என்று ஸ்டாலின்
தமிழக முதல்வராகப் பதவியேற்ற நான்கு ஆண்டு சாதனையை திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள்.
இதையொட்டிட் நேற்று சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினரை
சந்தித்துப் பேசினார்.
அப்போது ஸ்டாலின், “2021-ல், தமிழ்நாட்டில் மக்களுடைய நம்பிக்கையையும்,
ஆதரவையும் பெற்று, ஆறாவது முறையாக திமுக ஆட்சி அமைந்தது. மே 7-ம் நாள் நான் முதல்வராக
பொறுப்பேற்றுக் கொண்டேன். நாளை மே-7 திராவிட மாடல் அரசு ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து
வைக்கப்போகிறது. தேர்தல் அறிக்கையில் சொன்ன பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்.
தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களையும் தொலைநோக்குப் பார்வையோடு அதையும் நிறைவேற்றிக்
கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும், புதிய புதிய திட்டங்களை அறிவிக்கிறோம், நிறைவேற்றிக்
கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் சாதனைத் திட்டத்தின் தொடக்கத்திற்கான நாளாக இருந்து
கொண்டிருக்கிறது.
நாம் எந்த மாதிரியான சூழலில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றோம், மற்ற எல்லோரையும்
விட பத்திரிகையாளர்களான உங்களுக்குத் தான் நன்றாக தெரியும். முந்தைய ஆட்சியாளர்களால்
சீரழிந்த பத்தாண்டு கால நிர்வாகம் ஒருபக்கம். மதவாதம் உள்ளிட்ட பிற்போக்குத்தனங்களுக்கு
இடமளித்து, இந்திய நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கக்கூடிய அந்த நிலை ஒரு பக்கம்.
தமிழ்நாட்டுக்கு எந்தவித ஒத்துழைப்பையும் தர மறுக்கும் மத்திய அரசு இன்னொரு பக்கம்.
இதையெல்லாம் சமாளித்து நாம் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம்.
என்னைப் பொறுத்தவரைக்கும், விமர்சனங்களை முன்வைத்தால், அதனை ஆக்கபூர்வமாக
நான் ஏற்றுக்கொள்கிறவன். ஆலோசனைகள் இருந்தால், அதை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டிருக்கிறேன்.
உங்களுக்கு என்னுடைய அன்பான வேண்டுகோள் என்ன என்றால், இந்தியாவிற்கே முன்மாதிரியாக
பல திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். நம்முடைய திட்டங்களை பார்த்து,
பல்வேறு மாநில அரசுகள் அந்த திட்டங்களை அவர்கள் மாநிலங்களிலும் செயல்படுத்துகிறார்கள்.
அப்படிப்பட்ட திட்டங்களை, நீங்கள் மனப்பூர்வமாக பாராட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
விமர்சிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை…’’ என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் அறப்போர் இயக்கத்தினர் ஸ்டாலின் நான்காண்டு வேதனையை
வெளியிட்டுள்ளார்கள். அதன்படி, ‘’1. லோக் ஆயுக்தா சீரமைக்கப்படும் என்னும் தேர்தல்
வாக்குறுதி காணாமல் போச்சு 2. சேவை பெறும் உரிமை சட்டம் கொண்டு வரப்படும் என்னும் வாக்குறுதி
ஓடியே போச்சு 3. லஞ்ச ஒழிப்பு துறை தன்னிச்சையாக செயல்படும் என்னும் வாக்குறிதுக்கு
தண்ணீர் காட்டப்பட்டது. 4. அதானி விமானி என்று பஞ்ச் டியலாக் பேசிவிட்டு அதானி நிலக்கரி
ஊழலை காப்பாற்ற போராடும் அந்தர் பல்டி ஆட்சி
5. கிறிஸ்டி ரேஷன் ஊழலை சும்மா விட மாட்டேன் என்று சொல்லிவிட்டு
அதே கிறிஸ்டி நிறுவனத்துடன் ஊழல் டீல் போட்ட ஆட்சி 6. அதிமுக ஆட்சி ஊழல்வாதிகள் சிறைக்கு
செல்வார்கள் என்று சொல்லிவிட்டு இன்று அந்த ஊழல்களை காப்பாற்ற போராடும் சமரச ஆட்சி
7. கரூர் நெடுஞ்சாலை ஊழல், அமைச்சர் ராஜகண்ணப்பன் நில அபகரிப்பு ஊழல், 400 கோடி டிரான்ஸ்பார்மர்
ஊழல், 700 கோடி கல் குவாரி ஊழல், அண்ணா பல்கலைக்கழக மோசடி பேராசிரியர்கள் ஊழல்,
992 கோடி ரேஷன் போக்குவரத்து ஊழல் என திருடர்கள் முன்னேற போராடும் ஆட்சி. நான்காண்டு
ஆட்சி.. இதுவே சாட்சி !’’ என்று பட்டியல் போடுகிறார்கள்.
மக்களே தீர்ப்பு சொல்லும் நேரம் நெருங்கிவிட்டது.