Share via:
குடும்பத்தோடு வாருங்கள், கூட்டம் கூட்டமாக வாருங்கள் என்றெல்லாம்
மாநாட்டுக்கு அழைப்பு விடப்படுவது சகஜம். இந்நிலையில் வீட்டிலிருந்து மாநாட்டு நிகழ்ச்சிகளைப்
பாருங்கள் என்று விஜய் விட்டிருக்கும் அறிக்கை கவனிக்கத்தக்கதாக மாறியிருக்கிறது.
21ம் தேதி நடைபெறும் மாநாட்டையொட்டி நடிகர் விஜய், ‘’தமிழக மக்களை
உயிராகப் போற்றி மதிக்கும் இந்த விஜய் பற்றி உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். உங்கள்
மீதான உள்ளன்பு மிக்க அக்கறையின் காரணமாக இப்போது ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். கர்ப்பிணிப்
பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர்,
பள்ளிச் சிறார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், நம் கட்சி மாநாட்டை வீட்டில் இருந்தபடியே
நேரலையில் கண்டு மகிழுமாறு உரிமை கலந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மாநாட்டுக்கு வரும்போதும், மாநாடு நிறைவடைந்து ஊருக்குத் திரும்பும்போதும்
நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவக் கட்டுப்பாட்டுடன்
கடைப்பிடிக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம், தகுதியும் பொறுப்பும் மிக்க ஓர் அரசியல்
பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது தலையாய கடமை.
மக்கள் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ‘மனசாட்சி உள்ள மக்களாட்சி’
என்னும் உன்னதமான அரசியல் அதிகார இலக்கை நோக்கி உறுதியுடன் பயணிக்கிறோம். மகத்தான தேர்தல்
அரசியல் வரலாறு மீண்டும் நம் தமிழக மண்ணில், நம்மால் நிகழப் போவது நிஜம். எனவே, அத்தகைய
மாபெரும் அரசியல் விளைவை நிச்சயமாக நிகழ்த்திக் காட்டும் பேரறிவிப்பாக நமது மாநில மாநாட்டை
மாற்றிக் காட்டுவோம்…’’ என்று கூறியிருக்கிறார்.
நல்ல விஷயங்கண்ணா…