Share via:
கூட்டணி என்பது விட்டுக்கொடுத்து நம்பகத்தன்மையுடன் இருக்கவேண்டும்.
அப்போதுதான் நிரந்தரக் கூட்டணி அமையும், மக்களிடமும் நம்பிக்கை பெற முடியும். கடந்த
சட்டமன்றத் தேர்தலில் அதிகம் தொகுதிக்கு ஆசைப்பட்டு வீணாகப் போன அனுபவம் இருந்தாலும்
பிரேமலதா இன்னமும் திருந்தவில்லை. அதனாலே இன்னும் கூட்டணி அமையவில்லை. அவர்தான் அப்படி
என்றால், அவரது மகனும் அதே பாதையில் பேசுவதைப் பார்த்து தேமுதிகவினர் அதிர்ந்து நிற்கிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியமுத்தூரில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில்
கலந்துகொண்டு பேசிய விஜய பிரபாகரன், “தேமுதிக யாருடன் கூட்டணி சேருவார்கள் என்று
மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் இன்று
சரிசமமாக உள்ளன. அதற்கு இணையாக சாதி மதம் இல்லாத மூன்றாவது பெரிய கட்சியாக தேமுதிக
உள்ளது.
நாங்கள் எந்த கூட்டணிக்கு செல்கிறோமோ, அந்த கூட்டணிதான் வெற்றி
பெறும். கடந்த தேர்தலில் 500 முதல் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 60 தொகுதிகளில்
அதிமுக தோல்வியைத் தழுவிய தொகுதிகளில் திமுக வெற்றி அடைந்தது. தேமுதிகவிற்கு ஒவ்வொரு
சட்டமன்றத் தொகுதியிலும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வாக்குகள் உள்ளன.
இன்றைக்கு 170 தொகுதிகளில் போட்டியிட திமுகவும் அதிமுகவும் நினைக்கிறார்கள்.
கொள்கை முடிவாக அறிவிக்கிறார்கள். தேமுதிகவுக்கும் அதுபோல் கொள்கை உள்ளன.
கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டு
29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எங்களிடம் 20 முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதனால்
கூட்டணியில் அதிக இடங்கள் கேட்பது எங்கள் உரிமை. கூடுதல் இடங்கள தருவது உங்களின் கடமை.
தேமுதிக முதலமைச்சராக கேட்கவில்லை, உங்களை முதல் அமைச்சராக்கத்தான் இடங்கள் கேட்கிறோம்”
என்று பேசினார்.
திமுக, அதிமுக கூட்டணியில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இப்படி
வில்லங்கமாகப் பேசிவரும் விஜயபிரபாகரன் 30 சீட் வாங்குவதில் உறுதியாக இருக்கிறார்.
இதுதான் ஆசை என்றால் விஜய்யிடம் மட்டுமே கிடைக்கும்.
அதேநேரம், இந்த தேர்தலில் 30 தொகுதியில் மட்டும் தனித்து நின்று
ஜெயித்துக் காட்டுவோம் என்று சிலர் ஆசை காட்டுகிறார்களாம். என்ன நடக்கப் போகுதோ..?
