Share via:
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்தும், அவரது செயல்பாடுகள் குறித்தும் பா.ஜ.க. நிர்வாகி சரத்குமார் முதல்முறையாக சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கிய விஜய், தனது உச்சபட்ச சம்பளத்தை கொடுக்கும் சினிமாவை விட்டுவிட்டு அரசியல் கட்சி தொடங்கியது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் மாவட்ட பிரமுகர்களுடன் இணைந்து மிகவும் பிரமாண்டமான முறையில் முதல் மாநில மாநாட்டையும் நடத்தி முடித்துவிட்டார்.
மாநாட்டிற்கு முன்பு வரை அவருடன் நட்பு பாராட்டி வந்த பலர், மாநாட்டிற்கு பிறகு அவரை விரோதி போன்று பாவிக்கத் தொடங்கிவிட்டார்கள். இருப்பினும் எதற்கும் மனம் தளராத விஜய், சினிமாவுடன் சேர்ந்து கட்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் அவரின் ஒவ்வொரு செயல்பாடுகளும் அர்த்தம் கண்டுபிடித்து விமர்சனம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதன்படி பா.ஜ.க. பிரமுகரும் நடிகருமான சரத்குமார், சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் குறித்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளார். அவர் பேசும்போது, ‘‘நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது வரவேற்கத்தக்கது. அவரை போலவே நானும் சினிமாவில் இருந்துதான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அரசியலுக்கு வந்தேன். அதன்படி 2 மாபெரும் தலைவர்களை எதிர்த்து தேர்தலை சந்தித்தேன்.
விஜய் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசும்போது, நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் கவர்னர் பதவி குறித்து புரிதல் இல்லாமல் பேசி இருக்கிறார். புள்ளி விவரங்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும். அம்பேத்காரை கொள்கை தலைவராக வைத்துக் கொண்டிருக்கும் அவர், அரசியல் சாசனத்தில் உள்ள கவர்னர் பதவியை எப்படி வேண்டாம் என்று சொல்கிறார்?அவர் வீட்டில் இருக்கும் அனைவரும் இந்தி மொழியில்தான் பேசுகிறார்கள்? ஆனால் அவர் இந்தி படிக்க வேண்டாம் மும்மொழிக் கொள்கை வேண்டாம் என்று சொல்கிறார். அவர் எப்படி அவ்வாறு சொல்ல முடியும்? யாருமே சொல்லாத விஷயத்தை விஜய் அழுத்தமாக தெரிவிக்க வேண்டும் என்று சரமாரியாக குற்றச்சாட்டுகளை சரத்குமார் முன்வைத்து பேசியுள்ளார் .