Share via:
இன்று வெளியான ‘லியோ’ திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா நடிப்பில் இன்று (அக்.19) வெளியான திரைப்படம் ‘லியோ’. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இத்திரைப்படம் பல சிக்கல்களை கடந்து வெளி வந்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக லியோ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி குறித்த சென்னை நீதிமன்றத்தின் வழக்கு மற்றும் தமிழக அரசின் அறிவிப்பு என பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.
கேரளாவில் லியோ திரைப்படம் அதிகாலை 4 மணியளவில் வெளியானது. இதனால் தமிழ்நாடு& கேரள எல்லைப் பகுதியில் திரைப்படம் முன்னதாக வெளியான நிலையில் ரசிகர்கள் அங்கே படையெடுத்தனர். தமிழகத்தை பொறுத்தவரையில் லியோ திரைப்படம் காலை 9 மணிக்கு வெளியான நிலையில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் திரைப்படத்தை கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இருக்கைகள் உடைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக லியோ திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என்று அறிவித்த ரோகிணி திரையரங்கம் இந்த பிரச்சினை குறித்து நேற்று மாலை ஒரு முடிவுக்கு வந்தது. அதன்படி லியோ திரைப்படத்தை வெளியிட முடிவு செய்த ரோகிணி திரையரங்கில் கூடிய அதிகளவு ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

