Share via:
பாஜக மகளிரணியின் தேசியத் தலைவரும், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின்
பாஜக வேட்பாளருமான வானதி சீனிவாசன் தீடீரென பாதிக்கப்பட்டு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில்
சிகிச்சை எடுத்துவருகிறார். இதனால் இப்போது
அந்த தொகுதியில் பாஜகவை வெற்றி பெறச் செய்யும் பொறுப்பு அண்ணாமலை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தனக்கு உருப்படியான பதவி தரவில்லை என்று கோபத்தில் இருந்த அண்ணாமலைக்கு
சீட்டும் வழங்கப்படவில்லை. ஆகவே, பிரசாரம் செய்வதில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
வானதி சீனிவாசன் உடல் நலமில்லை என்றதும் அமித்ஷா நேரடியாக அழைத்து கட்டளை போட்டிருக்கிறார்.
எனவே, அதனை தட்ட முடியாமல் களத்தில் இறங்கிவிட்டார் அண்ணாமலை.
நேற்றைய கூட்டத்தில் அண்ணாமலை, ’’தமிழகத்தில் குடும்ப அரசியலும், ஊழல் ஆட்சியுமே அடையாளமாக
கொண்ட ஒரே கட்சி திமுக தான். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில், தமிழகம் இருண்ட காலத்தைச்
சந்தித்துள்ளது. தங்களின் சுயநலத்திற்காகத் தமிழகத்தை சுரண்டி கொள்ளையடித்து, மாநிலத்தின்
வளர்ச்சியை முடக்கியுள்ள கையாலாகாத திமுக ஆட்சியை வேரோடு பிடுங்கி எறியத் தமிழக மக்கள்
காத்திருக்கிறார்கள்.
திமுக ஆட்சியின் கையாலாகாத்தனத்தால் தமிழகம் போதைப்பொருட்களின்
கூடாரமாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகவும் மாறியுள்ளது. தேர்தல் வாக்குறுதிகள்
எதையும் நிறைவேற்றாமல், சாமானிய மக்களை வஞ்சித்து, ஊழலில் திளைக்கும் இந்த கமிஷன் ஆட்சிக்கு
முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தருணம் இது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது, திமுக
தனது தேர்தல் வாக்குறுதி எண்.84-யில் செண்பகவல்லி அணையை சீரமைப்போம் என கூறியது. கடந்த
5 ஆண்டுகளில், செண்பகவல்லி அணையைச் சீரமைக்கத் துப்பில்லாத திமுக அரசு, வீரகேரளம்புதூர்
பகுதியில் இரட்டை குளம் திட்டத்தையும் செயல்படுத்தாமல் உள்ளது. அதனால் 48 குக்கிராமங்களும்,
15 கிராம பஞ்சாயத்துகளும் வறட்சியின் பிடியில் உள்ளன. இப்படி விவசாயிகள் வாழ்வாதாரத்தைச்
சிதைத்துள்ளது திமுக அரசு. விவசாயிகளின் கண்ணீருக்கு வரவிருக்கும் தேர்தல் பதில் சொல்லும்…’’
என்று பொங்கியிருக்கிறார்.
