Share via:

மதிமுகவுக்குள் நடந்த உட்கட்சி பஞ்சாயத்து எல்லாம் முடிந்து கிட்டத்தட்ட
அனைவரும் துரை வைகோவை தலைவராக ஏற்றுக்கொண்டு விட்டார்கள். மதிமுகவுக்கு செல்வாக்கு
குறைகிறது என்ற பேச்சை தடுத்து நிறுத்தும் வகையில் துரை வைகோ தினமும் சுற்றுப்பயணம்
செய்துவருகிறார்.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் வைகோவுக்கு எம்.பி. சீட் கொடுக்கவில்லை
என்பது மதிமுகவில் கடும் அதிருப்தியானது. துரைவைகோ வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்தார்.
வைகோ இது பற்றி வெளிப்படையாகப் பேசவில்லை என்றாலும் திமுக மீது ஆத்திரத்தில் இருக்கிறார்.
நேற்று வந்த கமல்ஹாசனுக்குக் கொடுக்கும் மரியாதையை வைகோவுக்குக் கொடுக்காதது ஏன் என்று
கேள்வி எழுப்புகிறார்கள்.
திமுகவில் மீண்டும் வில்சனுக்கு பதவி கொடுக்கும்போது ஆதரவாளராகத்
தொடரும் வைகோவுக்கு மட்டும் கொடுக்காமல் அவமதிப்பு செய்திருக்கிறார்கள். வரும்
2026 தேர்தலில் கமல் கட்சிக்கு சீட் ஒதுக்க வேண்டும் என்பதைக் காரணம் காட்டி மதிமுக
சீட்டைக் குறைப்பதற்கு வாய்ப்பு அதிகம் என்பது வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து
மதிமுக மேல்மட்டத் தலைவர்கள் ஒன்று கூடி பேசியிருக்கிறார்.
இதன் அடிப்படையில் கொங்கு பகுதியைச் சேர்ந்த மதிமுக தலைவர் ஒருவர்
சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியிருக்கிறாராம். இரட்டை இலக்கத்தில்
சீட் கொடுப்பதாக இருந்தால் பேச்சுவார்த்தை
தொடங்கலாம் என்று கேட்டுள்ளார். இதற்கு எடப்பாடியார், ‘பேசுவோம்… நிறைய நேரம் இருக்கிறது’
என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறாராம்.
அதேநேரம் விஜய் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் துடிக்கிறார்கள்.
இழப்பதற்கு எதுவுமில்லை, எனவே புதிய கூட்டணியில் சேர்ந்து நம் பலத்தைக் காட்டுவோம்
என்று டென்ஷன் ஆகிறார்கள்.