Share via:

அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற கோஷத்தை எழுப்பியே டொனால்டு
ட்ரம்ப் பிரச்சாரம் செய்து, அதனால் வெற்றியும் பெற்று ஆட்சியில் அமர்ந்துவிட்டார்.
கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் வகையில், பதவியேற்ற நாளில் இருந்து பல்வேறு அதிரடி
அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகிறார். அதில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக
குடியேறியவர்களை அவரவர் நாட்டுக்கே திருப்பி அனுப்புவது மிக முக்கியமான நடவடிக்கையாகப்
பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மோடியும் அமெரிக்க அதிபர் டிரெம்பும் நல்ல நண்பர்கள்
என்பதால் இந்தியர்களுக்குப் பிரச்னை வராது என்றே பலரும் நம்பிக்கொண்டு இருந்தார்கள்.
ஆனால், இந்த நம்பிக்கையில் இடி விழும் வகையில் இந்தியர்களையும் நாடு கடத்தத் தொடங்கிவிட்டார்கள்.
இதில் முதல் கட்டமாக டெக்சாஸில் இருந்து அமெரிக்காவின் C-17 போர் விமானம் மூலம் முதற்கட்டமாக
205 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களில் பெரும்பாலானோர்
பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. இந்த
விவகாரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “ஓர் அரசாங்கமாக அமெரிக்காவின்
முடிவை ஆதரிக்கிறோம். அமெரிக்காவில் உள்ள சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திருப்பி
ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.” என்று சரண்டர் ஆகியிருந்தார்.
அதேநேரம், அமெரிக்க பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில்
வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில எப் 1 விசா வழங்கப்படுகிறது. இதேபோல கல்வி சுற்றுலா
வரும் வெளிநாட்டு மாணவ, மாணவியருக்கு எம் 1 விசா வழங்கப்படுகிறது. இந்தியா, சீனா,
பிரேசில், கொலம்பியா நாடுகளில் இருந்து எப்1, எம்1 விசா பெற்று அமெரிக்கா வரும் மாணவர்கள்
விசா காலம் முடிந்த பிறகும் தொடர்ந்து சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். இதில் மிக அதிகபட்சமாக
இந்தியாவை சேர்ந்த சுமார் 7,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக
தங்கியிருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.
தற்போது சுமார் 18,000 இந்தியர்களை அடையாளம் கண்டுபிடித்து அமெரிக்காவில்
இருந்து நாடு கடுத்துவதாகத் தகவல் தெரிகிறது. இந்த நிலையில் வரும் 13ம் தேதி பிரதமர்
நரேந்திர மோடி வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை நேரில் சந்தித்துப் பேச இருக்கிறார்.
மோடிஜியைக் கண்டதும் டிரம்ப் பயந்துபோய், வெளியே அனுப்பியவர்களை திரும்பவும் வரவழைத்துக்கொள்வார்,
மேற்கொண்டு யாரையும் வெளியேற்ற மாட்டார் என்று பா.ஜ.க.வினர் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படி நடந்தால் நல்லதுதான்.