Share via:
திரிஷா விவகாரம் குறித்து நேரில் ஆஜராக நடிகர் மன்சூர் அலிகான் கால அவகாசம் கேட்டிருந்த நிலையில் இன்று 2.30 மணியளவில் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்.
நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மீது தென்னிந்திய நடிகர் சங்கம், திரையுலகம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் என அனைவருமே கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நான் பேசியதை தவறாக சித்தரித்துவிட்டார்கள் என்று கூறிய நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையத்தின் உத்தரவின் பேரில் டி.ஜி.பி.சங்கர் ஜிவால் அறிவுறுத்தலின் பேரில், சென்னை ஆயிரம் விளக்கு, நடிகர் மன்சூர் அலிகான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியிருந்தது. சம்மனை மன்சூர் அலிகானின் மனைவி பெற்றுக் கொண்ட நிலையில், தனக்கு தொண்டை வலி, இருமல் இருப்பதால் இன்று ஆஜராக முடியாது என்று ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்திற்கு மன்சூர் அலிகான் கடிதம் எழுதி அனுப்பியிருந்தார்.
எனவே நாளை கண்டிப்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இன்று மதியம் 2.30 மணியளவில் ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜரானார். இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகானிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.