Share via:
திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர் ஒருவர் மேற்கு வங்க மாநிலத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், காங்கிரசுக்கும், எதிர்க்கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பா.ஜ.க.வினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.
இந்த வன்முறைகளில் நாட்டுத் துப்பாக்கிளால் சுட்டும், நாட்டு வெடிகுண்டுகள் வீசியும் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி வருவதால் உயிர் பலியும் ஏற்படுவதால் மேற்குவங்கத்தில் அடிக்கடி பரபரப்பு நிலவுகிறது.
அதன் ஒருபகுதியாக பட்பாரா பகுதியில் புரானிதளா பகுதியில் விக்கி ஜாதவ் என்பவர் தனது வீட்டின் வெளிப்பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர், விக்கி ஜாதவை துப்பாக்கியால் 9 முறை சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் நெஞ்சு, அடிவயிற்றில் குண்டு காயங்களால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விக்கி ஜாதவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகினறனர். படுகொலை செய்யப்பட்ட விக்கி ஜாதவ் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதேபோல் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலும் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமையன்று பஞ்சாயத்து செயலர் ஒருவர் மீது நாட்டுவெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.