Share via:
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று (அக்.11) கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
காவிரியில் இருந்து தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசு மற்றும் இவ்விவகாரத்தில் மவுனம் காக்கும் மத்திய அரசை கண்டித்தும் காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த கடையடைப்பு போராட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
1 லட்சத்திற்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இப்போராட்டத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினர், விவசாய சங்கத்தினர் மற்றும் வணிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். காலை 6 மணிக்கு தொடங்கிய இப்போராட்டம் மாலை 6 மணிவரை நீடிக்கிறது. மேலும் போராட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டக் குழுவினர் மறியலில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கடையடைப்பு போராட்டத்தின் காரணமாக டெல்டா மாவட்டங்கள் பரபரப்பாக காணப்படுகிறது.