Share via:
கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரை கவுரவப்படுத்தும் நோக்கில் அவரை உலகக்கோப்பை தொடரின் உலகளாவிய தூதராக நியமித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.
கிரிக்கெட் என்றால் சச்சின் டெண்டுல்கர். சச்சின் டெண்டுல்கர் என்றால் கிரிக்கெட் என்று சொல்பவர்களும், சச்சினை பார்த்துதான் கிரிக்கெட்டுக்கே வந்தேன் என்று பல கிரிக்கெட் வீரர்கள் சொல்வதும் நாம் பார்த்ததே.
அந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவப்படுத்தியுள்ளது. 2023 உலகக்கோப்பை தொடர் நாளை (அக்.5) முதல் நவம்பர் மாதம் 19ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. மொத்தம் 10 மைதானங்களில் நடைபெற உள்ள போட்டி தொடரை காண உலகத்தில் இருக்கும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொறு முறையும் உலகக்கோப்பை தொடரின் தூதுவராக போட்டியை ஏற்று நடத்தும் அணியின் முன்னாள் வீரர் ஒருவரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த முறை இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கு இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இச்செய்தி அறிந்ததும் உற்சாகமடைந்த சச்சின் டெண்டுல்கர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 1987ம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்ற போது பந்தை எடுத்துப் போடும் சிறுவனாக தான் மைதானத்தில் பணியாற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்ட அவர், 2011ல் உலகக்கோப்பை வென்றது தன் கிரிக்கெட் வாழ்வின் மணிமகுடம் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
உலகளாவிய தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், மற்ற அணிகளில் இருந்தும் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களும் கவுரவப்படுத்தப்பட உள்ளனர். அதன்படி ஐ.சிசி. வல்லுநர் குழுவில் மேற்கிந்திய தீவுகள் விவியன் ரிச்சர்ட்ஸ், தென்னாப்பிரிக்கா ஏ.பி.டி.வில்லியர்ஸ், இங்கிலாந்து இயான் மோர்கன், ஆஸ்திரேலியா ஆரோன் பின்ச், இலங்கை முத்தையா முரளிதரன், நியூசிலாந்து ராஸ் டெய்லர், இந்தியா சுரேஷ் ரெய்னா, முன்னாள் மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஏற்கனவே இந்தியா 2023 உலகக்கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று தான் கணித்துள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

