Share via:
திமுக ஆட்சியை அகற்றுவதற்கு கடுமையாகப் பேசி தொடர்ந்து வீடியோ
வெளியிட்டு வந்த சவுக்கு சங்கரை காவல் துறை ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளதாகத்
தெரிகிறது.
திமுக மீது தொடர் அட்டாக் செய்துவந்த சவுக்கு சங்கரை, பெண் போலீசாரை
அவதூறு செய்தார் என்று குற்றம் சாட்டி, போலீசார் அவரை 2024ல் கைது செய்தனர். இதற்காக
அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. மேலும், இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்,
குண்டர் சட்டத்தை ரத்து செய்ததோடு, அவரை ஜாமினிலும் விடுவித்தது.
அப்போதும் அரசுக்கு அஞ்சாமல் மீண்டும் யூடியூப் சேனலில் பேட்டி
அளித்துவந்தார். இதையடுத்து கஞ்சா வைத்திருந்தார் உள்ளிட்ட மோசடி வழக்குகளில் மீண்டும்
கடந்த டிசம்பர் 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இருப்பினும், அவரது தாயார் தொடர்ந்த
வழக்கில் அவருக்கு மருத்துவக் காரணங்களுக்கு நிபந்தனை ஜாமீனை வழங்கப்பட்டது. அத்துடன்,
வழக்கு தொடர்பாக பேட்டி அளிக்கக் கூடாது எனவும், வழக்கில் தொடர்புடைய நபர்களை சந்திக்கக்
கூடாது எனவும் கண்டிஷன் போட்டது.
நீதிமன்றத்தின் நிபந்தனைகளை மதிக்காமல் மீண்டும் சாட்சிகளுக்கு மிரட்டல் விடுப்பது,
பத்திரிக்கை மற்றும் சமூக வளைதளங்களில் பேசி வீடியோ வெளியிடுவது உள்ளிட்ட செயல்களில்
ஈடுபட்டு வந்தார். இதையடுத்து, இவர் ஜாமீன் நிபந்தனைகளை மீறி வருவதாக போலீசார் தொடர்ந்து
குற்றம் சாட்டி வந்ததோடு, சவுக்கு சங்கர் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில்
மனு தாக்கலும் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், சவுக்கு சங்கர் ஜாமீன் நிபந்தனைகளை மீறியதாக
தெரியவந்தால் அவரை கைது செய்யலாம் என்று உத்தரவிட்டது. மேலும், அவருடைய இடைக்கால ஜாமீன்
முடிவதால், அவர் சரண் அடைய வேண்டும் எனவும், இல்லையென்றால் போலீசார் உரிய நடவடிக்கையை
எடுக்கலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதன் பிறகும் சவுக்கு சங்கர் சரண் அடையாமல் தொடர்ந்து தலைமறைவாக
இருந்துவந்ததோடு, தனது யூடியூப் சேனலில் வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார். இதற்கிடையில்,
தன் மீது பதியப்பட்டுள்ள வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கர் தொடர்ந்து
தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து சென்னை காவல்துறை தேடி
வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சவுக்கு சங்கரின் எக்ஸ் கணக்கை முடக்கவும், இன்டர்நெட் ஐ.பி முகவரியை
கேட்டும் சென்னை போலீசார் எக்ஸ் சமூக வலைதளத்துக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதில்
கிடைத்த தகவல் படி இன்று ஆந்திராவில் வைத்து சவுக்கு சங்கரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
‘முடிந்தால் தன்னை கைது செய்யுங்கள்’ என்று சவுக்கு சங்கர் சவால்
விட்ட நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் வரை சவுக்கு சங்கரால்
வீடியோ போட முடியாது.