Share via:
அரசு விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்த 10ம் வகுப்பு மாணவியை 15 முறை தொடர்ந்து எலி கடித்ததால் அவரது கை மற்றும் கால் செயலிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானாவில் உள்ள கம்மம், தானவாய் குடத்தில் பி.சி. நல விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு லட்சுமி பவானி கீர்த்தி என்ற 10ம் வகுப்பு மாணவி தங்கி படித்து வந்துள்ளார். அதன்படி கடந்த மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான 8 மாதங்களில் மாணவியை 15 முறை எலி கடித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மாணவிக்கு வலது கால் மற்றும் வலது கை செயலழிந்துள்ளது.
மாணவியை ஒவ்வொரு முறை எலி கடித்த போதும் அவருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டதாக விடுதி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 15 முறை எலி கடித்ததால், மாணவி லட்சுமி பவானி கீர்த்திக்கு பக்கவிளைவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதனால் அவரது வலது கை மற்றும் வலது கால் செயலிழந்திருக்கலாம் என்றும் மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த கோர சம்பவம் குறித்து தகவல் அறிந்த அமைச்சர் புஷ்வாடா அஜய்குமார், மாணவிக்கு மம்தா பொது மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார். மாணவி லட்சுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. மருத்துவமனையில் மாணவிக்கு உயர்தர நரம்பியல் சிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு செய்தி கசிந்ததும், அரசு விடுதிகளின் நிலை குறித்து ஆளும் காங்கிரஸ் அரசை பி.ஆர்.எஸ். கட்சி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.