Share via:
சந்திரகிரகணத்தை முன்னிட்டு திருப்பதி கோவில் 8 மணிநேரம் மூடப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வருகிற 29ம் தேதி சந்திரகிரகணம் நிகழ உள்ளது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறியிருப்பதாவது:-
வருகிற 29ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.05 மணிக்கு தொடங்கி 2.22 மணிக்கு சந்திரகிரகணம் நிறைவடைய உள்ளது. கிரகண நேரத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன்பாகவே கோவில் கதவுகள் மூடப்படுவது வழக்கம்.
அதன்படி வருகிற 28ம் தேதி (சனிக்கிழமை) இரவு 7.05 மணியளவில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் மூடப்படும். அதைத்தொடர்ந்து அடுத்த நாளான 29ம் தேதி அதிகாலை 3.15 மணியளவில் கோவில் திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு பின்னர் கிரகண பரிகார பூஜைகள் செய்யப்படும் என்றும் அதன்பின்னர் சுப்ரபாத சேவையும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரகிரகணத்தை முன்னிட்டு 28ம் தேதி சகஸ்ர தீபலங்கார சேவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.