Share via:
காவிரி விவகாரம் தொடர்பாக தி.மு.க.வை எதிர்த்து வருகிற 16ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அ.தி.மு.க. உடனா கூட்டணி முறிந்த பிறகு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது கட்சியின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டு வருகிறார். பா.ஜ.க. தலைமையை சமாதானப்படுத்துவதற்காகவும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழக பா.ஜ.க.வை தூக்கி நிறுத்துவதற்காகவும் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்.
அந்த வகையில் அண்ணாமலை தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சி செய்து வருகிறது. இருப்பினும் காவிரிநீர் திறக்கப்படவில்லை. இதனால் காங்கிரஸ் அரசை கண்டிக்காமல் கண்துடைப்பு தீர்மானத்தை தி.மு.க. அரசு சட்டப்பேரவையில் கொண்டு வந்துள்ளது என்று அண்ணாமலை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் வருகிற 16ம் தேதி கும்பகோணத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தங்களின் கூட்டணிக் கட்சி என்ற ஒரே காரணத்துக்காக, கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டிக்காமல் அரசு முறை நடவடிக்கையை தி.மு.க. மேற்கொள்ளவில்லை என்றும், அரசியல் லாபங்களுக்காக தி.மு.க. நாடகமாடி, தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வருகிறது என்றும் அண்ணாமலை அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.