Share via:
பேரியம் பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடை அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ.12) தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வெளிவந்த தகவலின்படி டெல்லியில் காற்றுமாசு அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
பேரியம் உப்பு மற்றும் ரசாயனங்களால் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் காற்று மாசுபாடு ஏற்படுத்துவதுடன் பல்வேறு ஆபத்துகளையும் விளைவித்துவிடுகிறது. இதைத்தொடர்ந்த தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பசுமை பட்டாசுகளை வாங்கவும், வெடிக்கவும் மக்கள் மத்தியில் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி சில யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் பட்டாசு விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதே போல சில மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதற்கான கால நிர்ணயத்தையும் அந்தந்த மாநில அரசுகள் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், பேரியம் மற்றும் தடை செய்யப்பட்ட ரசாயனங்களால் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை டெல்லி என்.சி.ஆர். பகுதிக்கு மட்டுமல்லாமல், அனைத்து மாநிலத்திற்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளது. இந்த மனுமீதான விசாரணையில் தீர்ப்பளித்த நீதிபதிகளான ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்ரேஷ் அடங்கிய அமர்வு பேரியம் உப்புகள் கொண்ட பட்டாசுகளை வெடிக்கும்பட்சத்தில் ஏற்படும் தவறுகளுக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தது. மேலும் காற்று மற்றும் ஒலி மாசுபாட்டை குறைக்கவே இந்த நடவடிக்கை என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.