Share via:
பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்காட்டில் அறந்தாங்கி அருகில் மாரிமுத்து என்ற மாணவன் பெருங்காடு அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளான். மாரிமுத்து வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாரிமுத்து நேற்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடந்த விழாவிலும் கலந்து கொண்டுள்ளார்.
பள்ளி முடிந்த நிலையில் மாலை 3 மணியளவில் வீட்டிற்கு செல்வதற்கான தனது புத்தகப்பையை எடுத்துக் கொண்டு பள்ளி வளாகத்தில் நடந்து சென்ற போது திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், மாரிமுத்துவை பலமுறை எழுப்பியும் கண் விழிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
அதைத்தொடர்ந்து தகவலறிந்த ஆசிரியர், மாரிமுத்துவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரிமுத்து ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மாணவனின் உயிரிழப்பு செய்தியை கேட்ட குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் பள்ளி முன்பு கூடி மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பெற்றோரை அழைத்து சென்ற பள்ளி நிர்வாகம் பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை காண்பித்துள்ளனர். அதன் பின்னர் மாணவனின் உடலை பிரேத பரிசோதனை செய்ய பெற்றோர் அனுமதித்ததாக கூறப்படுகிறது. தற்போது மாணவனின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
9ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.