Share via:
தமிழக அரசு செய்து வரும் மகளிர் நலத்திட்டங்களுக்கு நன்றி தெரிவித்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் நேரில் சந்தித்தனர்.
அப்போது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளித்தது உள்ளிட்ட பல்வேறு மகளிர் நலத்திட்டங்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும் இந்த சந்திப்பின் போது இந்தியா கூட்டணியின் மாநில உரிமைகள் பாதுகாப்பு சிறப்பு மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது குறித்து பேசிய அவர்கள், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வழங்கினர்.
அந்த மனுவில், 31 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வாச்சாத்தி பழங்குடி மக்கள் பாலியல் வன்கொடுமை தீர்ப்பை அமல்படுத்துவது, இழப்பீடை உரிய நேரத்தில் பெற்றுத் தருவது, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாப்பதற்கு மின்சார வாரியத்தின் நிலை கட்டண உயர்வு மற்றும் பீக் ஹவர் கட்டண உயர்வை திரும்பப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
இந்த கோரிக்கைகளை விரைவில் பரிசீலனை செய்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
