Share via:
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனான நாரா லோகேஷை அமராவதி இன்னர் ரிங் ரோடு சீரமைப்பு ஊழல் வழக்கில் 14வது குற்றவாளியாக சேர்த்துள்ளது ஆந்திராவில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநில முன்னாள் முதல்-வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியில் இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு 118 கோடி ரூபாய் சட்டவிரோதமாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கில் கடந்த 9ம் தேதி சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷூக்கு புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. அமராவதி இன்னர் ரிங் ரோடு சீரமைப்பு ஊழல் வழக்கில் நாரா லோகேஷ் தற்போது 14வது குற்றவாளியாக சேர்த்து ஆந்திர சி.ஐ.டி., ஏ.சி.பி. சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று (செப்.26) மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அந்த மனு இன்று (செப்.27) விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில்தான் நாரா லோகேஷ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். எனவே அவர் கைதாக வாய்ப்புள்ளதாக ஆந்திர அரசியல் வட்டாரம் தெரிவித்துள்ளது. சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை அடுத்து டெல்லியில் முகாமிட்டுள்ள நாரா லோகேஷ் தனது தந்தைக்கு ஆதரவாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் குழுவை ஒருங்கிணைத்து வருகிறார். தந்தை, மகன் என தொடர்ந்து வழக்குகளும், கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால் ஆந்திராவில் பெரும் பதற்றம் நிலவுகிறது.