Share via:
பா.ஜ.க. பிரமுகரும் நடிகையுமான குஷ்பு பதிவிட்டுள்ள ட்வீட்டில் ‘சேரிமொழி’ என்ற வார்த்தை தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வில்லன் நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதன் உறுப்பினரான நடிகை குஷ்பு வலியுறுத்திருந்தார். அதன் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் டி.ஜி.பி.க்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல்நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நெட்டீசன் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், ‘‘மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்தப்பட்ட நேரத்தில் குஷ்பு மற்றும் மகளிர் ஆணையம் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் நடிகை திரிஷாவுக்காக எழுந்து வந்திருக்கிறது. இந்த விவகாரத்திலாவது தாமரைக்கு 2 ஓட்டு தேறுமா என்கிற நப்பாசையில்! மற்றபடி மகளிர் நலனெல்லாம் அந்த கட்சியில் இல்லை’’ என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலடிகொடுக்கும் வகையில் குஷ்பு தனது பதிவில், ‘‘தி.மு.க. குண்டர்கள் இப்படித்தான் முட்டாள்தனமான மொழியில் பேசுவார்கள். ஒரு பெண்ணை அவமதிக்க, மன்னிக்கவும் உங்களது சேரி மொழியில் பேச முடியாது’’ என்று வெளியிட்டுள்ளார். இதில் குஷ்பு பயன்படுத்திய ‘சேரி மொழி’ என்ற வார்த்தை தற்போது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
முன்னாள் பா.ஜ.க. நிர்வாகியும், நடிகையுமான காயத்ரி ரகுமாரம், பிக்பாஸ் போட்டியாளராக இருந்த போது, ‘சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி ட்ரோலுக்கு ஆளானார். இந்த சம்பவத்தை தொடர்ந்து குஷ்புவின் இந்த பதிவுக்கு நடிகை காயத்ரி ரகுராம் ஒரு ட்விட்டை பதிவிட்டுள்ளார்.
அதில், ‘‘இதைச் சொல்ல எனக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால் நான் என் தவறை உணர்ந்துவிட்டேன். நான் அதை மீண்டும் செய்ய மாட்டேன். அவர்களின் உணர்வை அறியாமல் சேரி என்பதை பயன்படுத்தியதற்காக நான் மிகவும் வலியுடன் உணர்ந்தேன். சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக நான் அனைவருக்கும் ஒரு பெரிய பாடமாக இருந்தேன். என் தவறுக்காக நான் தாக்கப்பட்டேன். இன்று வரை அந்த வார்த்தையை பயன்படுத்தியதற்காக நான் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறேன். குஷ்பு அக்கா தவறை உணர்ந்து ட்வீட்டை விரைவில் நீக்கிவிடுவார் என நம்புகிறேன். மேலும் சேரி மொழி என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.