Share via:
சென்னை சோழவரம் அருகே 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சோழவரம் அருகே பிரபல கூலிப்படை தலைவன் என்று சொல்லப்படும் முத்துசரவணன் மற்றும் சதீஷ் என்ற 2 ரவுடிகள் இன்று போலீசார் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அதிகாலையில் இந்த என்கவுண்டர் சம்பவம் அரங்கேறியுள்ளது. இவர்கள் இருவரும் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக டெல்லியில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. டெல்லியில் இருந்து 2 ரவுடிகளும் சென்னைக்கு அழைத்து வந்த போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சித்துள்ளனர்.
இதனால் தற்காப்புக்காக போலீசார் நடத்திய என்கவுண்டரில் 2 ரவுடிகளும் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. என்கவுண்டரில் ரவுடி முத்து சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ரவுடி சதீஷ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
2 ரவுடிகள் தாக்கியதில் காயமடைந்த 3 காவலர்களும் தற்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதோடு என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 2 ரவுடிகளின் உடல்களும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகாலை நடந்த இந்த என்கவுண்டர் சம்பவத்தால் சோழவரம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.