Share via:
லியோ திரைப்படத்தின் காலை 7 மணிக் காட்சி கிடையாது என்று தமிழக அரசு கைவிரித்ததால் படக்குழுவினரும், விஜய் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
லியோ திரைப்படம் தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. நாளை (அக்.19) லியோ திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இதற்கிடையில் காலை 4 மணி ரசிகர்கள் காட்சிக்கு அனுமதிக்கும்படி உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் முதல் தடையை போட்டது.
அதைத்தொடர்ந்து 9 மணி காட்சிக்கு பதிலாக 7 மணி காட்சிக்கு அனுமதிக்கக் கோரி பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. உயர்நீதிமன்றமோ இவ்விவகாரம் குறித்து தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதால் தமிழக அரசு இன்று (அக்.18) மதியத்திற்குள் பதில் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
எப்படியும் தமிழக அரசு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளித்துவிடும் என்று படக்குழுவும், ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தமிழக அரசு பெரிய கல்லை போட்டுள்ளது. அதாவது அரசாணைப்படி 7 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதிகாலை 4 மணிக்கு ரசிகர் காட்சி திரையிட அனுமதி மறுத்த தமிழக அரசு, வருகிற 19ம் தேதி முதல் (நாளை) வருகிற 24ம் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 1.30 மணிவரை 5 காட்சிகளை திரையிட அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசின் இந்த அனுமதி மறுப்பால் விஜய் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஏற்கனவே லியோ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவும் பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. இதனால் விஜய் சொல்ல இருந்த குட்டி ஸ்டோரியையும் ரசிகர்கள் தவறவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

