Share via:
சென்னை ராயபுரத்தில் 28 பேரை கடித்துக் குதறிய நாய்க்கு ரேபிஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தெருநாய்களின் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது. அமைதியாக இருக்கும் தெருநாய்கள் திடீரென்று தெருக்களில் சென்று கொண்டிருக்கும் பொது மக்களை கடித்து குதறும் செய்திகள் அடிக்கடி வெளி வந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் சென்னை ராயபுரத்தில் 28 பேரை கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயபுரத்தில் தெருநாய் ஒன்று பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என மொத்தம் 28 பேரை கடித்து குதறியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஒன்றாக சேர்ந்து அந்த நாயை கல்லால் அடித்து கொன்றனர். அந்த நாயின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அதற்கு ரேபிஸ் நோய் தொற்று இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து அந்த நாயிடம் கடி வாங்கி சிகிச்சை பெற்று வரும் 28 பேருக்கும் 5 டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னை முழுவதும் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து தடுப்பூசி போடும் பணியை பெருநகர மாநகராட்சி ஊழியர்கள் துரிதப்படுத்தியுள்ளனர்.