Share via:
பரந்தூரில் விமான நிலைய திட்டத்தை எதிர்த்து எகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து 765 நாட்களைத் தாண்டி போராடி வருகிறார். இந்த நிலையில் அங்கு நில எடுப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடுஅரசு முதல்நிலை அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியைக் கொடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டத்தைத் தீவிரப்படுத்திய பொதுமக்கள் மீது வழக்கு போடப்பட்டிருப்பது அனைத்துக் கட்சியினரின் கண்டனத்துக்கும் ஆளாகியிருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4550 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்காக, ஏகனாபுரம் உட்பட 13க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3250 ஏக்கர் விளைநிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளையும் அழித்து, நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து போராடி வருகிறார்கள். தமிழகத்தில் இருந்து வெளியேறி ஆந்திராவுக்குச் செல்ல இருப்பதாகக் கூறிய மக்களை சமாதானப்படுத்தி இருந்தார்கள். இந்த நிலையில் தான் திடீரென நில எடுப்புக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்ப்பவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாம்தமிழர் சீமான், ’’தங்கள் நிலத்தைப் பாதுகாப்பதற்கு போராடும் பெண்கள், முதியவர்கள், விவசாயிகள் உட்பட போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாகவும், பொதுமக்கள் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும் திமுக அரசு பொய் வழக்கு பதிவு செய்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும்.
விளை நிலங்களை அழிக்கும் திட்டங்களை தொடர்ந்து மக்கள் எதிர்த்து வரும் நிலையில் எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களோடு நிற்பது போல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அடக்கி ஒடுக்குவது வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற பச்சைத் துரோகமாகும்.
சனநாயக நாட்டில் அமைதியான முறையில் அறவழியில், மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதும், குரலற்ற எளிய மக்களின் போராட்டத்திற்குத் தோள்கொடுத்துத் துணைநிற்பதென்பதும் அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அதற்குக்கூட அனுமதிமறுத்து திமுக அரசு வழக்கு பதிவதென்பது வெட்கக்கேடானதாகும். மக்களாட்சி, கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை குறித்தெல்லாம் மேடைக்கு மேடை பேசும் திமுக புகழ்பாடிகள் என்ன இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? இதுதான் திராவிட மாடலா? இதுதான் சமூக நீதியா?
எனவே, தமிழ்நாடு அரசு ஏகனாபுரம் பொதுமக்களை எவ்வித வழக்கும் பதியாமல் விடுவிக்க வேண்டுமெனவும், தங்களின் நில உரிமைக்காகப் போராடும் மக்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக செவி சாய்க்க வேண்டும்’’ என்று ஆவேசம் காட்டியிருக்கிறார்.