Share via:

அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் பலியானதாக ஏர் இந்தியா நிறுவனம்
அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் விமான விபத்து நடந்த இடத்தில் பலியான
மாணவர்கள் எண்ணிக்கை அடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விமான விபத்து குறித்து
வெளியாகும் தகவல்கள் நெஞ்சை உலுக்குகின்றன.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட
ஏர் இந்தியா விமானம், கிளம்பிய சில நிமிடங்களில் அங்குள்ள மருத்துவ மாணவர்கள் விடுதியில்
விழுந்து நொறுங்கியது. விமானத்தில் முழுவதுமாக நிரப்பப்பட்டு இருந்த எரிபொருள் காரணமாக
விமானம் முழுவதும் சிறிது நேரத்தில் எரிந்து தீக்கிரையானது.
விமான விபத்தில் சிக்கிய பெரும்பாலானோர் உடல் எரிந்த நிலையில்
கிடைத்தது. கரிக்கட்டையாக மாறியிருக்கும் உடல்களை அடையாளம் காண முடியாத பரிதாபம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரி விடுதி மீது விமானம் விழுந்ததால்
மெஸ்ஸில் சாப்பிட்டுக்கொண்டு இருந்த 5 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலரும்
காயப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வெளிநாட்டினரும் இந்த விமானத்தில் இருந்த காரணத்தால் உயிரிழந்தோரின்
குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விபத்தில் விஸ்வாஸ் குமார் என்ற நபர் மட்டும் உயிர் பிழைத்திருப்பது ஆச்சர்யத்திலும்
ஆச்சர்யமாக கருதப்படுகிறது. விமானத்தில் 11ஏ இருக்கையில் பயணித்த பிரிட்டீஷ் குடியுரிமை
பெற்ற விஸ்வாஸ் குமார், எமர்ஜென்ஸி எக்ஸிட் எனப்படும் அவசர கால வழி மூலம் கீழே குதித்து
காயங்களுடன் உயிர் தப்பியிருக்கிறார்.
அவர் விபத்து குறித்து, “விமானம் புறப்பட்ட 30 வினாடிகளுக்குப்
பிறகு, ஒரு பெரிய சத்தம் கேட்டது, பின்னர் விமானம் விபத்துக்குள்ளானது. இவை அனைத்தும்
மிக விரைவாக நடந்தன. நான் எழுந்தபோது என்னைச் சுற்றி உடல்கள் கிடந்தன. விமானத்தின்
பாகங்கள் சிதறிக் கிடந்தன. நான் பயந்து எழுந்து ஓடத் தொடங்கினேன். எனது சகோதரர் அஜய்
வேறு வரிசையில் அமர்ந்திருந்தார். நாங்கள் டாமன் டையூ சென்றுவிட்டு லண்டன் திரும்ப
இருந்தோம். என்னுடன் பயணம் செய்த அவரை எங்கும் காணவில்லை…’’ என்று கூறியிருக்கிறார்.
மூன்று குழந்தைகளுடன் கூடிய ஒரு குடும்பத்தின் கடைசி செல்ஃபி பார்ப்பவர்
மனதை புண் படுத்துகிறது. பிரதிக் ஜோஷி கடந்த ஆறு வருடங்களாக லண்டனில் வசித்து வந்தார்.
ஒரு மென்பொருள் நிபுணரான அவர், தனது மனைவி மற்றும் இந்தியாவில் தங்கியிருந்த மூன்று
இளம் குழந்தைகளுக்கு வெளிநாட்டில் நிரந்தரமாகக் குடியேற திட்டமிட்டிருந்தார். அதன்படி
இரண்டு நாட்களுக்கு முன்பு, அவரது மனைவி, மருத்துவ நிபுணரான டாக்டர் கோமி வியாஸ், இந்தியாவில்
தனது வேலையை ராஜினாமா செய்தார். ஐந்து பேரும், லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் 171
இல் ஏறினார்கள். செல்ஃபியை எடுத்து, உறவினர்களுக்கு அனுப்பினார்கள். இந்த விபத்தில்
அவர்கள் உயிர் இழந்ததால் அதுவே கடைசி செல்ஃபி ஆகிவிட்டது.
இந்த விமானத்தை ஓட்டிய கேப்டன் சுமீத் சபர்வால் கடைசியாக, ‘விமாத்தில்
போதிய உந்துதல் இல்லை, விமானம் மேலே செல்லவில்லை, நாங்கள் உயரத்தை இழக்கிறோம், மே டே
மே டே’ என்று கூறியதே கடைசி வார்த்தையாகப் பதிவாகியுள்ளது.
மே டே அழைப்பு” என்றால் உதவிக்கான ஒரு துயர அழைப்பாகும்,
இது கப்பல்கள் மற்றும் விமானங்களில் கடுமையான மற்றும் உடனடி ஆபத்து சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
பிரெஞ்ச் மொழியில் இருந்து வந்த சொல் “m’aider” என்றால் “help
me.”, அவர்களை யாரும் காப்பாற்ற முடியவில்லை.