Share via:
இஸ்ரேல்- பாலஸ்தீனம் மோதலுக்கு இடையே சிக்கியுள்ள 18,000 இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.
இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான போர் இன்று 6வது நாளாக நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தி காசா பகுதி தங்களுடைய நாட்டின் எல்லை என்று இஸ்ரேலும், பாலஸ்தீனமும் உரிமை கொண்டாடி வருவதால் பல ஆண்டுகளாக இந்த பிரச்சினை நீடித்து வருகிறது.
இதைத்தொடர்ந்து 4 முறை போர் நடைபெற்றுள்ள நிலையில் தற்போது கடந்த 6 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலை குறிவைத்து ஹமாஸ் அமைப்பினர் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதை எதிர்த்து இஸ்ரேல் ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த மோதலில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள 18 ஆயிரம் இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஆபரேஷன் அஜய் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் சிறப்பு விமானத்தில் இந்தியர்கள் மீட்டுக் கொண்டுவரப்படுவார்கள் என்று மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘‘இஸ்ரேல்& பாலஸ்தீனம் இடையேயான போரில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு வசதியாக ஆபரேஷன் விஜய் தொடங்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களுக்காக சிறப்பு விமானங்களும் இயக்கப்படவுள்ளன. வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.