Share via:
சிறுத்தைப்புலி தாக்கியதில் 5 வயது சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பலராம்பூர் மாவட்டத்தில் சோஹெல்லா வனப்பகுதிக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த ரித்தேஷ் என்ற 5 வயது சிறுவன் தனது தாத்தாவுடன் காட்டுக்கு சென்றுள்ளான். அப்போது புதர்களுக்குள் மறைந்திருந்த சிறுத்தைப்புலி ஒன்று சிறுவன் ரித்தேஷை கண் இமைக்கும் நேரத்தில் கவ்விக் கொண்டு மின்னலாக பாய்ந்து மறைந்தது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வதற்குள் சிறுத்தைப்புலி மறைந்து போனதால் சிறுவனை கண்டுபிடிக்க முடியாமல் போனது.
பின்னர் காட்டுப்பகுதிக்குள் மக்கள் ஒன்றாக சேர்ந்து சிறுவனை தேடத் தொடங்கினார்கள். அப்போது சிறுவனின் உடல் சிதைந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து அம்மாவட்ட கலெக்டர் அரவிந்த் சிங், சிறுத்தையைக் கொன்ற சிறுத்தைப்புலியை விரைவில் கூண்டு வைத்து பிடிக்கப்படும் என்றும், பிரேத பரிசோதனைக்கு பின்னர் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் உறுதியாக தெரிவித்தார்.
5 வயது சிறுவன் சிறுத்தைப்புலியால் கொடூரமாக வேட்டையாடப்பட்டு பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.