Share via:
காவிரி விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ள நிலையில் அதற்கு 2 ஆயிரம் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து கர்நாடக விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதன்படி நேற்று (செப்.26) பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதன் காரணமாக பெங்களூருவில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. கடைகள், நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள், பேருந்துகள் என எந்த வசதியும் கிடைக்காமல் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
இந்நிலையில் நாளை மறுநாள் (செப்.29) கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கும் நிலையில் இப்போராட்டத்திற்கு மேலும் 2 ஆயிரம் அமைப்புகள் பங்கேற்கிறது.
அதோடு திரைத்துறை, உற்பத்தி துறை, போக்குவரத்துத் துறை மற்றும் ஓட்டல் துறையினரும், விமான நிலைய ஊழியர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் கர்நாடக, தமிழக எல்லைகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. எந்த அசம்பாவிதமும் நடக்காத வண்ணம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.