Share via:
மின்சார உபகரணங்களின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதால் 20 நிமிட இடைவெளியில் நீல வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இன்று காலை 11.20 மணியளவில் நீல வழித்தடத்தில் விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் திடீரென்று மின்சார உபகரணங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. கோளாறை சரி செய்யும் பணியில் வல்லுநர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் 20 நிமிட இடைவெளியில் ஒரு வழிப்பாதையில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி சுங்கச்சாவடி மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து நந்தனம் வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரெயில் தற்போது 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரி செய்யப்பட்டு வழக்கம் போல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்த மெட்ரோ ரெயில் நிர்வாகம், தடங்கலுக்கு வருந்துவதாக தெரிவித்துள்ளது. பச்சை வழித்தடத்தை பொறுத்த வரையில் ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.