Share via:

உலகில் தமிழர்கள் இல்லாத நாடுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பரவியிருக்கிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு நாட்டிலும் தமிழர்களின் பண்டிகைகள், தமிழ்மொழியின் கொண்டாட்டங்கள் களைகட்டத்தான் செய்கின்றன. இதில் மற்றொரு விசேஷம் என்னவென்றால், தமிழர்களின் கொண்டாட்டங்களில் அந்தந்த நாட்டு மக்களும் கலந்து கொண்டு மகிழ்ச்சியடைவதுதான்.
அந்த வகையில் ஜெர்மன் நாட்டில் முதல் முறையாக தமிழ்நாடு தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது. ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் நடைபெற்ற தமிழ்நாடு தினக்கொண்டாட்டத்தில் திரளான தமிழர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவினை பிராங்க்பர்ட்டில் உள்ள இந்திய துணை தூதரகம், ஐரோப்பிய தமிழர்கள் கூட்டமைப்பு மற்றும் ஜெர்மனி தமிழ் அமைப்புகள் கூட்டாக இணைந்து நடத்தின.
இவ்விழாவில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி, வணிக முதலீடு மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் பேசிய அமைச்சர் சக்ரபாணி, ‘‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்ற போது தமிழகம் தொழில்துறையில் 14வது இடத்தில் இருந்தது. தற்போது அது 3வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. ஜெர்மனி வாழ் தமிழர்கள் தாய் நாடா இந்தியா, தமிழ்நாட்டை மறந்துவிடாமல் அவர்களால் முடிந்தளவுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவிகளை செய்ய வேண்டும்’’ என்று வேண்டுகோள்விடுத்து பேசினார்.
அவரைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ‘‘தொழில்துறைகளை பொறுத்தவரையில் இந்தியாவின் தலைநகராக தமிழ்நாடு விளங்கி வருகிறது. எனவே அப்பேர்ப்பட்ட தமிழகத்தின் பெருமையை இங்குள்ள ஜெர்மனி தமிழர்கள், அன்றாடம் ஒரு மணிரேநமாவது மற்ற வெளிநாட்டவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார்.
பிராங்பர்ட்டில் இயங்கி வரும் தமிழரும் இந்திய துணைத் தூதரக அதிகாரி பி.எஸ்.முபாரக் பேசும்போது, ‘‘பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5 டிரில்லியன் டாலரை நோக்கியும், தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலரை நோக்கியும் வளர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஜெர்மனியில் உயர் பதவிகளிலும், கண்டுபிடிப்பாளர்களாகவும் உள்ள தமிழர்கள், இந்தியாவின் இந்த முயற்சிக்கு உதவலாம். இந்த முயற்சிக்கு தமிழ்நாடு தின நிகழ்ச்சியும் பயன் தரும்’’ என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய ஐரோப்பிய கூட்டமைப்பின் அமைப்பாளரும் தமிழருமான செல்வகுமார் பேசும்போது, ‘‘இனி ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பாவில் தமிழ்நாடு தினம் விமரிசையாக கொண்டாடப்படும். மேலும் இங்குள்ள தமிழர்களை கவுரவிக்கும் வகையில், தமிழர் விருது வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்று பெருமையுடன் தெரிவித்தார்.
ஜெர்மனியில் நடைபெற்ற தமிழ்நாடு தின கொண்டாட்டத்தில், தமிழ்நாடு நுகர்வோர் விநியோகத் துறை ஆணையர் மோகன், நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை, டிட்கோ இயக்குநரும் அயலகத் தமிழர்கள் பிரிவின் ஆணையருமான பி.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். விழாவில் முடிவில் பிராங்க்பர்ட் தமிழ்ச்சங்க நிர்வாகி கண்ணன் நன்றி உரை நிகழ்த்தினார்.